355. மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து

மானுவேல் தொண்டரே

பல்லவி

மானுவேல் தொண்டரே!-ஆர்ப்பரித்து
மகிழ்ந்து பூரிப்போம்.

அனுபல்லவி

மானிலமீது சமாதானமா மென்ற
வானவர் வாழ்த் துதவறா தென நம்பும்,
நானிலமெங்கும்[1] சகோதர ஐக்கியம்
நண்ணும் பகலருணோதயம் ஆகுதே:
நாடுவோம்,-அதைத் தேடுவோம்,-இனி
நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். - மானு

சரணங்கள்

1. தீர்க்க ருரைப்படியே-உலகெங்கும்
 தீங்கிலாக் காலம் வரும்:
 தாக்கும் படைக்கலங்கல்-கிருஷிகச்
 சாதனமாகி விடும்:
 மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்,
 மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய்,
 வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள்
 நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
 நிலைத்து,-அன்பு-வளர்த்துக்,-கரங்
 கொடுத்து,-உற வடுத்துமதிப்பர். - மானு

2. போன காலங்களிலே-நடந்திட்ட
 பொல்லாங்கும் பாடுகளும்,
 ஈனத் துரோகங்களும்,-விளைவித்த
 ஈங்கிசைபோதும் இனி
 வானபரனின் மலரடிக் கண்ணுற்று,
 வல்ல பரிசுத்த அன்பினாவி பெற்று,
 மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று,
 மாட்சியாய்,-அவர்-சாட்சியாய்,-இந்த
 மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே. - மானு

3. சர்வ ஜனநேசம்-நிறைவுறத்
 தாமதமானாலும்,
 கர்வம் பொறாமை பகை-தடை செய்யக்
 காலம் நீடித்தாலும்,
 அருள் நம்பிக்கை கொண்டற்பமெனு நம்மால்
 ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
 இருளகல விடிவெள்ளி தோணுது;
 எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
 யேசுவே,-இக-மாசுடர்-அவர்
 நேசமே,-புவித்-தோஷமகற்றிடும். - மானு


ராகம்: உசேனி
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்:  ஜி.சே. வேதநாயகம்

[1] பூமியெங்கும்