366. வா பாவீ மலைத்து நில்லாதே வா

வா, பாவி

பல்லவி

வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா.

சரணங்கள்

1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
உள்ளபடி வாவேன். - வா

2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
உன் பாவத்தைச் சுமந்தேன்;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன், பாவி, வா. - வா

3. கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. - வா

4. விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
சீக்கிரம் ஓடி வாவேன். - வா

5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
வாராயோ, பாவி? - வா


ராகம்: ஹரிகாம்போதி
தாளம்: ஏக தாளம்
ஆசிரியர்:  தேவசகாயம் உபாத்தியாயர்