305. பரிசுத்தாவி நீர் வாரும் திடப்

திடப்படுத்தல் பெறுவோர்க்கு அருள்தாரும்

பல்லவி

பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று

அனுபல்லவி

அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி

சரணங்கள்

1. செயல்குண வசனத் தீதுகள் போக,
திருச்சபை யதிலிவர் பூரணராக,
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
ஜெபதப தியானஞ் செய்வதற்காக. - பரி

2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,
நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
சகல தீதான பேதங்களும் நீங்க. - பரி

3. அஞ்ஞானங்க ளோடிவர் சமர்[1] புரிய,
அருண்மறை யதினாழங் களையறிய,
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய,
நின்னடியாரிவ ரென்பது தெரிய. - பரி

4. பக்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய,[2]
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய,
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய,
நிலைவரமாய் இவராவியில் துய்ய. - பரி

5. தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
உணர்வோடு தொழுது கீதங்கள் பாட,
உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. - பரி


ராகம்: யமுனாகல்யாணி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்:  ச.பே. ஞானமணி

[1] போர்
[2] பிழைக்க