தேவா, திருக்கடைக்கண் பார்
பல்லவி
தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா!
வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா.
அனுபல்லவி
கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! - தேவா
சரணங்கள்
1. மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி,
பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! - தேவா
2. பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை;
வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. - தேவா
3. அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் பசாசடாமல்,
எந்த விதமும் கெடாமல் ஆளுமே, ஸ்வாமி! - தேவா
4. சர்ப்பனை[1] யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்,
எப்படி அடிமை கரை யேறுவேன், ஸ்வாமி! - தேவா
5. எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்;
சித்தம் இரங்காய், என் மணவாளனே, ஸ்வாமி! - தேவா
6. இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! - தேவா
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] வஞ்சகம்