260. தேவா இரக்கம் இல்லையோ

தேவா, இரக்கம் இல்லையோ?

பல்லவி

தேவா, இரக்கம் இல்லையோ?-இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?

அனுபல்லவி

ஜீவா, பரப்ரம[1] ஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன், ஒரே - தேவா

சரணங்கள்

1. எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே,-கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லா தருள் புரியும் நல்லாயன் யேசு நாதா! - தேவா

2. எங்கும் நிறைந்த ஜோதியே,-ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே,-எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை[2] நீக்கும்
துங்க இஸ்ரவேலின் வங்கிஷ க்ரீடாபதி! - தேவா

3. வேதாந்த வேத முடிவே,-ஜெக
ஆதாரம் ஆன வடிவே,-ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே; யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை. - தேவா

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

 

[1] பரம்பொருள்
[2] நட்புகளை