தேவனே நான் உமதண்டையில் சேர்வதே
பல்லவி
தேவனே, நான் உமதண்டையில்-இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
அனுபல்லவி
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே,[1] தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன். -தேவனே
சரணங்கள்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில்-பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே-என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
3. நித்திரையினின்று விழித்துக்-காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன். - தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப்-பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்,
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன். - தேவனே
ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: வே. சந்தியாகு
[1] அரசனே