தெய்வன்பின் வெள்ளமே
கண்ணிகள்
1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்
2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்தி[1]க்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.
3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்,
கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா!
4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கம் யாவும்
தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,
தூக்கித் தற்காத்தருள்வாய்.
5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்;
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்.
6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை?
ராகம்: குந்தளவராளி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சவரியான் ஏசுதாசன்
[1]. புத்தி