400. ஜென்மமார் கருவிலே வினைவிடம்

நன்மையேனுஞ்செயத் திறனிலேன்

1. ஜென்மமார் கருவிலே வினைவிடம்[1] தீண்டலால்
நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந்
தின்மையே செயவருந் திறனுளேன், சிறியவோர்
நன்மையே னுஞ்செயத் திறனிலேன், நவையினேன்.[2]

2. நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ
கான்பிறங் கலினுறுங் கதழ்விடப்[3] பாந்தளில்[4]
ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன், உணர்விலேன்,
ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே?

3. அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்-டு
என்னையாய் பொடுபுரந் தென்றுநன் றேதரும்
தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்-து
என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன்.[5]

4. ஓரணுத் துணையுநல் லுணர்விலேன் உலகுசெய்
கோரணிக்[6] குளமுடைந் திடையுமோர் கோழையான்,
ஆரணத் துரைபடிந் தயர்வுயிர்த் திலனினி
மாரணக்[7] கடல் குளித் தயர்வனோ மதியிலேன்?

5. எப்பெரும் பதகரும்[8] இதயநொந்; தேங்கிவந்-து
அப்பனே பிழைபொறுத் தருளு மென் றடையிலோர்
ஒப்பரும் புதல்வனுக் குருகிமன் னிப்பமென்-று
இப்பெருஞ் சுருதிதந் திறைமறந் திடுவரோ?

ராகம்: நவரோஜ்
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்:  எ.ஆ. கிருஷ்ணப்பிள்ளை

[1] விஷம்
[2] குற்றமுள்ளேன்
[3] கோபிக்கும் விஷமுள்ள
[4] பாம்பைப்போல
[5] அழுவேன்
[6] பாசாங்கு
[7] மரண
[8] சண்டாளரும்