318. பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

பாலர் நேசனே

பல்லவி

பாலர் நேசனே,-மிகப்-பரிவுகூர்ந்திந்தப்
பாலரை யேந்தி-ஆசீர்-வதியும், யேசுவே;

சரணங்கள்

1. பாலர் வந்திடத்-தடை-பண்ணொணாதென்றீர்;
சாலவந்தருள்-தந்து-தலைமேற் கைவைப்பீர். - பாலர்

2. வான ராச்சியம்-இவர்-வசத்த தென்றீரே;
ஞானஸ்நானத்தால்-உந்தம்-நாமஞ்சூட்டுவீர். - பாலர்

3. கானம் பாடியே-பாலர்,-கர்த்தரே உமைத்
தானே, ஓசன்னா!-எனச்-சத்தமிட்டாரே. - பாலர்

4. தேவ பாலனே,-நீருஞ்-சிறிய பிள்ளையாய்
மேவினீ ரதால்-உமை-வேண்டினோ மையா - பாலர்

5. ஆவியா லிவர்-ஞான-அபிஷேகம் பெற,
ஜீவ நேசரே,-அருள்-சிறியர்க் கீவீரே - பாலர்

6. தாசர் நாங்கள் செய்-வாக்குத்-தத்தம் மீறாமல்,
நேச யேசுவே,-யெமை-நிலைநிறுத்துவீர். - பாலர்


ராகம்: மோகனம்
தாளம்: ஏகதாளம்
ஆசிரியர்: யாழ்ப்பாணம் எரேமியா