316. பாரும் பாரும் ஐயா எனை

எனை அன்பாகப் பாரும்

பல்லவி

பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு,

அனுபல்லவி

பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா,
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா - பாரும்

சரணங்கள்

1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,[1]-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்,
போதக நாயனே, மாதவ தூயனே,
கோதறும்[2] ஆயனே; ஆதியின் சேயனே! - பாரும்

2. ஞாலந்தனில்[3] இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே[4],-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண[5] வாசனே,
பூரண ராசனே, தாரணி, ஈசனே. - பாரும்


ராகம்: ஆனந்தபைரவி
தாளம்: ஆதி தாளம் 
ஆசிரியர்: தேவசகாயம் எழுத்தர்

[1] அம்பு
[2] குற்றமற்ற
[3] பூமியில்
[4] ஞானமே
[5] வேதம்