298. பணிந்து நடந்துகொண்டாரே

பணிந்து நடந்துகொண்டாரே
                                         
பல்லவி
 
பணிந்து நடந்துகொண்டாரே-பரன் பாலனும்      
கனிந்து தாய் தந்தையருக்கு.

அனுபல்லவி 

அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு
அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி, - பணி

சரணங்கள்
 
1. தந்தை தாய் தனை மதித்து-அவருடைய‌
தயவின் சித்தத்துக் கமைந்த‌
மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி, - பணி

2. தந்தைக் குகந்தவேலையில்-அவருடனே
விந்தை யுடனே பயின்றார்;
நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்
எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் - பணி

3. ஆவி பலமடைந்தார்;-உலக தேவ‌
அறிவிலும் நிறைவுகொண்டார்;
தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்
பூவில் அவர்க்கு நிகர் புனித னில்லாதபடி, - பணி


ராகம்: காம்போதி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: சா. சீமோன்